Friday, November 23, 2012

The Attacks Of 26/11(2012) - 7 நிமிட முன்னோட்டம்

எனக்கு மிகவும் பிடித்த பாலிவுட் டைரக்டர் "ராம் கோபால் வர்மா"  மும்பை 26/11 தாக்குதல்களை மைய படுத்தி "The Attacks Of 26/11" என்கிற பெயரில் ஒரு திரைபடத்தை எடுத்து உள்ளார். படத்தின் ட்ரைலரை வெளியிடாமல், படத்தின் முதல் 7 நிமிட காட்சிகள் வெளியிட்டு உள்ளார். யூ ட்யூப் வீடியோ காண கிடைக்கிறது. ராம் கோபால் வச்சா குடுமி, செரச்சா மொட்டை என்கிற ரீதியில் படம் எடுப்பார். அவரின் ஒன்று படம் செம கிளாஸ் ஆக இருக்கும் உ.தா (சர்க்கார்-1, உதயா, ரத்தசரித்திரம்-1) , இல்லை படு மொக்கையாக யாருமே பார்க்க முடியாத படி இருக்கும் (ஷோலே ரீமேக் ஆக்). The Attacks Of 26/11 எந்த மாதிரியான படம் என்பதை 7 நிமிட முன்னோட காட்சிகளை கொண்டு என்னால் யூகிக்க முடியவில்லை.

நானா பட்டேகர் மும்பை தாக்குதல்களை விவரிக்கும் படி படம் ஆரம்பிக்கிறது. இந்திய படகு ஒன்று வழி தவறி பாகிஸ்தான் கடல் எல்லையில் நுழைந்து விடுவது போன்ற காட்சி ஒன்று வருகிறது. அங்கு உதவி கேட்டு ஒரு பாகிஸ்தான் படகு இந்திய படகை நோக்கி வருகிறது. அந்த பாகிஸ்தான் படகில்  இருந்தது 11 தீவிரவாதிகள் இந்திய படகில் நுழைவது போன்ற ஒரு காட்சி,அத்துடன் வீடியோ முடிவடைகிறது. தீவிரவாதிகளில் கடைசியாக இந்திய படகில் நுழைபவன் அஜ்மல் கசாப். "சஞ்சீவ் ஜெய்ஸ்வால்" என்கிற டெல்லியை சேர்ந்த டிவி நடிகர் ஒருவர் கசாப் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து உள்ளார். ஹாலிவுட் போன்றே இந்தியாவிலும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள் வருவது நிச்சியம் வரவேற்க்க தக்க விஷயமே. படம் அடுத்த மாதம் ரிலீஸ். படத்தை காண மிகவும் ஆவலாய் இருக்கிறேன்.

ட்ரைலர் காண: 



Tuesday, November 06, 2012

IT ACT SECTION 66 A- தேவை சில மாற்றங்கள்.

முன் குறிப்பு : சமீபத்தில் இணையத்தில் கருத்து தெரிவிப்பவர்களின் மீதான, சில நிகழ்வுகளுக்குப் பிறகுதான் இந்த தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000, அதன் உட்பிரிவு 66A நாம் எல்லோராலும் கவனிக்கப்பட்டது. அதில் இருக்கும் ஷரத்துகள் அரசியல் சாசனம் நமக்கு அளித்துள்ள உரிமைகளை பறிப்பதாக உள்ளதாக ஒரு எண்ணம் ஏற்பட்டுள்ளதால், பதிவர் திரு தருமி ஐயாவின் கருத்தில் முழு உடன்பாடு கொண்டு, அந்த சட்டத்தின் 66A பிரிவுக்கான எனது எதிர்ப்பை தெரிவிக்க, நானும் அதை இங்கே பதிவாக இடுகிறேன்.
===================================================================================

I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில்,
நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு”
என்று இன்று இந்து தினசரியில் அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும்
இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக 
வலியுறுத்தியுள்ளது.
===================================================================================
  • இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில்மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும்என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையேபறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்குவேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.
  • இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.
  •  முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.
===================================================================================

Marx Anthonisamy அவர்களின் பேஸ் புக் ஸ்டேட்ஸ்.அவரின் இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.....
"நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைப்பதில் உள்ள பிரச்சினைகளுக்கு அப்பால் நீதிமன்றத்தையும் நாம் கடைசி வரை பயன்படுத்த வேண்டியுள்ளது என சமாதானம் செய்து கொண்டு அடுத்த பொது நல வழக்கை நாஙாகள் தொடுத்துள்ளோம். தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் அந்த 66 a பிரிவு, அதை வைத்துத்தானே கார்தி சிதம்பரம் போன்ற ப'பெரிய கைகள்' கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்க முயல்கின்றன. அதை ரத்து செய்ய வேண்டுமென ஒரு வழக்கை நாளை தொடுக்கிறோம். வழக்கறிஞர் ரஜினிதான் அந்த வழக்கையும் நடத்துகிறார்."
===================================================================================
ட்விட்டர்,பேஸ் புக், கூகுள் பிளஸ்ஸில் நிலைச்செய்தியாக பகிர,
"இந்திய அரசே,தனிமனித உரிமைகளையே பறிக்கும். I-T ACT Section 66 A திருத்தப்பட வேண்டும். தனிமனித கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை வேண்டும்"
நன்றி!
===================================================================================
வேண்டுகோள்:
கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாடு கொண்ட அனைத்து இணைய ஊடகவியலாளர்களும் இப்பதிவினை பிரதியெடுத்து வெளியிட்டு ஒத்துழைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.மேலும் பதிவிட்ட பின் இடுகையை தருமி அவர்களின் தளத்தில் இணைக்கவும். நன்றி!


Thursday, November 01, 2012

Skyfall- 2012- Bond is Back. திரைவிமர்சனம்

Skyfall இந்த வருசத்துல நான் ரொம்பவே எதிர்பார்த்த படம். ஜேம்ஸ்பாண்ட் படம் வேற. இன்னைக்கு தான் ரிலீஸ் ஆச்சு. படம் என்னோட எதிர்பார்ப்பை பூர்த்தி செஞ்சதா என்றால், நிச்சியம் பூர்த்தி செஞ்சது என்று சொல்வேன். இது வரை வெளிவந்த உள்ள 23 பாண்ட் படங்களை தரவரிசை படுத்தினால் Skyfall படத்திருக்கு முதல் 5 இடங்களில் நிச்சியம் ஒரு இடம் உண்டு. ஆக்ஷ்ன், செண்டிமெண்ட், நம்பிக்கை துரோகம், மெல்லிய நகைச்சுவை என்று பல பரிமாணங்களில் படம் பயணம் செய்கிறது. முன்னாடியே சொன்ன மாதிரி இந்த படம் போன ஜேம்ஸ்பாண்ட் படமான Quantum of Solace தொடர்ச்சியாக இல்லாமல், புது கதைகளத்தை கொண்டு உள்ளது. படம் இஸ்தான்புல் நகரில் ஆரம்பித்து, லண்டன் சென்று, பிறகு ஷாங்காய், மறுபடியும் லண்டன் பயணம் செய்து கடைசியில் ஸ்காட்லாந்து நாட்டில் Skyfall என்ற வீட்டில் முடிவடைகிறது.


இங்கிலாந்து நாட்டின் உளவு அமைப்பான MI6 (Military Intelligence, Section 6) மீதும் அதன் தலைவர் மிஸ் M மீதும் முன்னால் MI6 ஏஜென்ட் ஒருவன் தொடுக்கும் தாக்குதலை மிஸ் M பாண்டின் உதவியுடன் எப்படி முறியடிக்கிறார் என்பது தான் படத்தின் ஒன் லைனர். இந்த படம் வழக்கமான எல்லா பாண்ட் பார்முலாவையும் கொண்டுள்ளது. படத்தின் ஆரம்பம் அட்டகாசமாய் இருக்கும். முதல் சேசிங் காட்சி இது வரை எந்த பாண்ட் படங்களிலும் வந்திராத காட்சி. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வில்லன் ஒருவன் MI6 ரகசிய ஏஜென்ட்களின் பெயர் விவரங்களை அடங்கிய சிப் ஒன்றை திருடி கொண்டு ஓடுவான். பாண்ட் அவனை துரத்தி செல்வது போன்ற காட்சி. டின்டின் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு பைக்/ஜீப் சேசிங் காட்சி வருமே. அது போன்ற, இல்லை இல்லை அதை விட அட்டகாசமான காட்சி இது. அதில் ஸ்பீல்பெர்க் அனிமேஷன் கொண்டு அந்த காட்சியை எடுத்து  இருந்தார். ஆனால் இதில் சாம் மெண்டஸ் நிஜ மனிதர்களை கொண்டு மிக சிறப்பாய் எடுத்து உள்ளார். நான் இது வரை  பார்த்த சிறந்த சேசிங் காட்சிகளில் இதுவும் ஒன்று, சில இடங்களில் எனது ஹார்ட் பிட் தாறுமாறாக ஏறி விட்டது. முதல் 15 நிமிடங்கள் மிஸ் செய்யாமல் பாருங்கள்.


MI6 ரகசிய ஏஜென்ட்களின் பெயர் விவரங்களை அடங்கிய சிப் வில்லன் ஜேவியர் பார்டெம் (Javier Bardem) கைகளுக்கு போகிறது. அதை கொண்டு ஜேவியர் சில ரகசிய ஏஜென்ட்களை கொலை செய்கிறான். லண்டனில் இருக்கும் MI6  தலைமை அலுவலகத்தில் M இல்லாத நேரம் பார்த்து குண்டு வெடிப்பை ஏற்படுத்துகிறான். ஜேவியர் லட்சியம் உளவு துறை தலைவர் M மை கொல்ல வேண்டும் என்பது தான். அதுவும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கொல்வது இல்லை, M மை லண்டனில் வைத்து அனைவரும் அறியும் படி கொலை செய்ய வேண்டும். ஜேவியர் ஏன் M மை கொலை செய்ய துடிக்கிறான் ? M முன்னால் MI6 ரகசிய ஏஜென்ட் ஜேவியர்க்கு செய்த துரோகம் என்ன ? போன்ற கேள்விக்கான விடைகளை Skyfall படம் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.


டேனியல் க்ரெய்க், மறுபடியும் தான் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமானவர் என்பதை நிரூபித்து உள்ளார். இவரது முந்திய இரண்டு பாண்ட் படங்களை விட இதில் மிகவும் சிறப்பாக நடித்து உள்ளார். முகத்தை எப்பொழுதும் இறுக்கமாக வைத்து இல்லாமல், நிறைய இடங்களில் மாறுபட்ட முகபாவனைகளை அழகாக வெளி படுத்தி உள்ளார். பழைய பாண்ட் படங்களை போல் இல்லாமல் இதில் நிறைய புன்னகைக்க வைக்கும் நகைச்சுவை டயலாக்ஸ் வருகிறது. க்ரெய்க் தனக்கு காமெடியும் வரும் என்று நிருபித்து உள்ளார். ஆக்சன் காட்சிகளில் வழக்கம் போல் பட்டைய கிளப்பி உள்ளார். நோலன் படம் போல், இதிலும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உபயோக படுத்தாமல் ரியல் டைம் ஆக்சன் கட்சிகளாக படம் ஆக்கி உள்ளனர். எப்பொழுதும் கிராபிக்ஸ் காட்சிகள் விட ரியல் ஆக்சன் காட்சிகள் தான் ரசிகர்களை கவரும். இப்படமும் நிச்சியம் ரசிகர்கள் கவரும்.

ஜேவியர் பார்டெம், இவரது கதாபாத்திரத்தின் பெயர் சில்வா, இவர் முன்னால் MI6 ஏஜென்ட். படத்தில் இவரது அறிமுகம் சரியாய் ஒரு மணி நேரம் கழித்து வரும். இன்னும் சரியாய் சொல்ல வேண்டும் என்றால் இண்டர்வெல் (இந்தியாவில் மட்டும்) முடிந்த உடன் தான் இவரின் அறிமுக காட்சி வரும், மொத்தமே 30 நிமிடங்கள் தான் வருவார், அதில் 20 நிமிடங்கள் சண்டை காட்சிகள். இவரது பெர்பார்மான்ஸ் காட்சிகள் என்று சொன்னால் மொத்தமே ரெண்டு காட்சிகள் தான். இவரும் பாண்டும் சந்திக்கும் காட்சி ஒன்று, மற்றொன்று இவரும் M மும் சந்திக்கும் காட்சி. மனிதர் இந்த இரண்டு காட்சிகளில் அசத்தி இருப்பர். அதுவும் இவர் பாண்ட் உடன் நடத்தும் உரையாடல்கள் அதகளம். டைரக்டர் இவரது கதாபாத்திரத்தை உருவாக்கும் போது டார்க் நைட் ஜோக்கர் கதாபாத்திரத்தை மனதில் வைத்து உருவாக்கி இருப்பர் போல். ஜோக்கர் அளவுக்கு புத்திசாலியாக இவரை காட்டி இருப்பார்கள். இவர் பாண்டிடம் மாட்டி பிறகு தப்பிக்கும் காட்சிகள் TDK போலவே இருந்தன.


M ஆக நடித்து இருப்பவர் ஜூடி டென்ச். M16 உளவு துறை தலைவர் M ஆக GoldenEye படத்தில் ஆரம்பித்த இவரது பயணம் இந்த படத்தில் முடிவடைகிறது. படத்தின் மெயின் கதை இவரை சுற்றியே பின்ன பட்டு இருக்கும். தனது பாத்திரத்தை உணர்ந்து நன்றாக நடித்து உள்ளார். பாண்டிடம் இவர்கண்டிப்பு காட்டும் காட்சிகள் யதார்த்தமாய் இருக்கும். மறுபடியும் பணியில் சேர பாண்ட் சில டெஸ்ட் மேற்கொள்ள வேண்டியது வரும், அந்த எபிசோடில் M மற்றும் பாண்ட் இடையே நடைபெறும் உரையாடல்கள் செமையாக இருக்கும். Q கதாபாத்திரத்தை பென் விஷ்ஷா என்ற இளைஞர் ஏற்று நடித்து உள்ளார். அணைத்து படங்களிலும் Q  தான் ஜேம்ஸ்பாண்ட்க்கு நவீன ஆயுதங்களை வழங்குவர். படத்தின் முக்கியமான தருணங்களில்தான் க்யூ தலைகாட்டுவார். பல ஜேம்ஸ் பாண்ட் படங்களில் க்யூ தலைகாட்டுவதே இல்லை என்று கூட சொல்லலாம்.

கடைசியாக பாண்ட் கேர்ள்ஸ் நோமி ஹாரிஸ், மற்றும் Berenice Marlohe, இவர்களுக்கு படத்தில் பெரிய ரோல் இல்லை. சில இடங்களில் திரைக்கதையில்  தொய்வு ஏற்படுகிறது, MI6 ரகசிய ஏஜென்ட்களின் லிஸ்ட்டை தீடிர் என்று அனைவரும் மறந்து விடுகிறார்கள். இது போன்ற சில குறைகள் இருக்க தான் செய்தன, ஆனால் ஜேவியர் க்ரெய்க் மற்றும் ஆக்சன் காட்சிகள் இந்த குறைகளை மறக்க அடித்து விடுகின்றன. படத்திருக்கு ஒளிப்பதிவு ரோஜர் டீகின்ஸ், கிளைமாக்ஸ் காட்சியில் இவரது உழைப்பு நன்றாக தெரியும். மனிதர் அசத்தி இருப்பார். கிளாசிகல் டைரக்டர் சாம் மெண்டஸ் பாண்ட் ரசிகர்களை ஏமாற்றாமல் நல்லதொரு பாண்ட் ஆக்சன் படத்தை வழங்கி உள்ளார். 

Skyfall: Bond is Back....

My Rating: 8.0 .........


Wednesday, October 31, 2012

Skyfall-(2012) ஜேம்ஸ்பாண்ட் வயசு 50.

மார்ச் மாசம் "எதிர்பார்பை எகிற வைக்கும் ஹாலிவுட் படங்கள்- 2012" அப்படிங்கிற பேருல ஒரு பதிவு எழுதினேன். அதுல இந்த வருஷத்துல நான் ரொம்பவே எதிர்பார்க்கிற "The Dark Knight Rises" மற்றும் "Skyfall" படத்தை பத்தி ரொம்பவே சின்ன லெவல்ல எழுதி இருந்தேன். TDKR அட்டகாசமா போன ஜூலை மாசம் ரிலீஸ் ஆச்சு. நோலன் என்னோட எதிர்பார்ப்பை நிறையவே பூர்த்தி செஞ்சுட்டார். நான் பார்த்த சிறந்த படங்கள் வரிசையில் TDKR நிச்சியம் ஒரு இடம் உண்டு. இப்ப Skyfall, ஜேம்ஸ்பாண்ட் படம். ஏனோ பதிவுலகம் இந்த படத்தை TDKR அளவுக்கு கண்டுக்கவே இல்ல. TDKR படத்துக்கு அவ்வளவு எதிர்பார்ப்பு இருக்க காரணம் பேட்மேன் சீரீஸ்ல அதற்க்கு முன்னால வந்த TDK முக்கிய காரணம். ஆனா Skyfall முன்னால வந்த ஜேம்ஸ்பாண்ட் படமான Quantum of Solace செமையாக சொதப்பி இருந்தது. நவீன காலத்து ஜேம்ஸ்பாண்ட் படங்களில் எனக்கு சுத்தமாய் பிடிக்காமல் போன படம் Quantum of Solace தான். 


நவீன காலத்து ஜேம்ஸ்பாண்ட் படங்களின் ஆரம்பம் 1995 வருடத்தில் இருந்தது தான் தொடங்கியது. அதாவது பியர்ஸ் பிராஸ்ன ஜேம்ஸ்பாண்ட் ஆக நடிக்க ஆரம்பித்த பிறகு வந்த பாண்ட் படங்களை நவீன ஜேம்ஸ்பாண்ட் ERA என்று சொல்லலாம். எனக்கு மிகவும் பிடித்த பாண்ட் நடிகர் என்றால் அது பியர்ஸ் பிராஸ்ன தான். ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்துக்கு கன கச்சிதமாய் பொருந்தினார் பியர்ஸ். பியர்ஸ் பிராஸ்ன மொத்தம் 4 பாண்ட் படங்களில் நடித்து உள்ளார் (GoldenEye, Tomorrow Never Dies, The World is Not Enough, Die Another Day). எல்லாமே அட்டகாசமான பாண்ட் படங்கள். பாண்ட் படங்கள் அனைத்தும் ஒரே பார்முலாவை கொண்டவையாக இருக்கும். முதல் 15 நிமிடங்கள், செமையான சாகச காட்சி அல்லது சேஸிங் காட்சியுடன் படம் ஆரம்பிக்கும். சேஸிங் முடிந்த உடன் ஜேம்ஸ் பாண்டின் தீம் மியூசிக் ஒலிக்க பாண்ட் ஸ்டைலாக நடந்துவந்து திரையை சுட்டதும் திரை முழுவதும் ரத்தமயமாகி டைட்டில் வரும், டைட்டில் சாங் கண்டிப்பாய் மிக பிரபல பாப் பாடகி ஒருவர் பாடி இருப்பார். 

அடுத்து பாண்ட்க்கு ப்ராஜெக்ட் அசைன்மென்ட் நடைபெறும், உளவு துறையின் தலைவரான மிஸ் M தான் பாண்ட்க்கு ப்ராஜெக்ட் அசைன் பண்ணுவார். முன்பு அசைன்மென்ட் என்றால் ரஷ்யாவின் அணு குண்டு தயாரிப்பை தடுத்து நிறுத்துவது, அல்லது உலக அழிவிற்க்கு வித்திடும் ஆராய்ச்சியை தடுத்து நிறுத்துவது. இப்பொழுது அந்த அசைன்மென்டில் தீவிரவாதிகளை ஒழிப்பதும் சேர்ந்து விட்டது. பாண்ட் தனக்கு குடுக்க பட்ட அசைன்மென்ட்டை எப்படி முடிக்கிறார் என்பது தான் அணைத்து பாண்ட் படங்களில் இருக்கும் கதை. படத்திற்கு படம் இந்த அசைன்மென்ட் மட்டும் மாறும். ஏனோ இது வரை இவர்கள் பின் லேடன்  உயிரோடு இருந்த காலத்தில் அவரை வம்புக்கு இழுத்தது இல்லை. அதுவும் இல்லாமல் இவர்கள் கியூபாவையும் சீன்டியது இல்லை. காரணம் பாண்ட் அமெரிக்க உளவாளி இல்லாததும் ஒரு காரணமாய் இருக்கலாம்.


பியர்ஸ் பிராஸ்னக்கு பிறகு பாண்ட் கதாபாத்திரத்தை ஏற்றவர் டேனியல் க்ரெய்க். இவரை பாண்ட் ஆக ஏற்றுக் கொள்வதில் பெரிதும் தயக்கம் இருந்தது. முந்தைய பாண்ட் நடிகர்களுடன் ஒப்பிடப்பட்டு நிறைய விமர்சனங்கள் எழுந்தன. எந்த எக்ஸ்பிரஷன் இவர் முகத்தில் காட்ட மாட்டார் என்பது தான் குற்றச்சாற்று. எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியான முக எக்ஸ்பிரஷன் காட்டுவார் என்று பலர் சொன்னார்கள். ஆனால் இவரது முதல் பாண்ட் படமான "கேஸினோ ராயல்" வந்த உடன் அணைத்து விமர்சனங்களும் நொறுங்கி போயின. இது வரை வந்த பாண்ட் பாடங்களில் அணைத்து வசூல் சாதனையை இந்த படம் முறியடித்து. அது மட்டும் அல்லாது நல்ல கிரிடிக் ரேட்டிங் வேறு கிட்டியது. IMDB ரேட்டிங் 7.9. இது தான் பாண்ட் பாடங்களின் அதிகபட்ச ரேட்டிங் என்று நினைக்கிறன். எனக்கு மிகவும் பிடித்த பாண்ட் படமும் இது தான். 

அடுத்து பாண்ட் படமான "Quantum of Solace" சிலும் டேனியல் க்ரெய்க் தான் நடித்தார். இந்த படம் "கேஸினோ ராயல்" படத்தின் தொடர்ச்சியாக வெளி வந்தது. கேஸினோ ராயல் படத்தில் தனது காதலியை கொன்றவர்களை பாண்ட் பழி வாங்க புறப்பட்டு விட்டார் என்பது போல் கதையை அமைத்து இருப்பார்கள். திரைக்கதையில் மிகவும் சொதப்பி இருந்தார்கள். படத்தில் க்வான்ட்ம் என்ற அமைப்பை பற்றி துப்பு துலக்க ஜேம்ஸ் பாண்ட் சில நாடுகளுக்கு செல்வார். ஏழை நாடுகளை சர்வதேச நிறுவனங்கள் எவ்வாறு சுரண்டுகின்றன என்பதை படத்தில் காட்டும் விதம் கொடூரமாக இருக்கும். படத்தின் முடிவும் மிகவும் மொக்கையாக இருந்தது. பாக்ஸ் ஆபீஸில் நன்றாகவே வசூல் செய்தது. ஆனால் பாண்ட் ரசிகர்களுக்கு க்வான்ட்ம் பெரிய ஏமாற்றமே.

Skyfall Trailer:

இப்பொழுது, அதாவது நாளை வெளி வர இருக்கும் பாண்ட் படம் Skyfall. இந்த படம் Quantum of Solace படத்தின் தொடர்ச்சி கிடையாது. புதிய கதைக்களம். இந்த படம் வழக்கமான பாண்ட் பார்முலாவை கொண்டு இருக்கும் என்று நம்புகிறேன். முதல் 10 நிமிட சேஸிங்/சாகச காட்சி துருக்கியின் இஸ்தான்புல்லில் எடுத்து உள்ளார்கள். 10 நிமிட காட்சியை படமாக்க பட குழுவினர்க்கு முன்று மாதங்கள் பிடித்தன. நான் மிகவும் எதிர்பார்க்கும் காட்சி இது. அடுத்து என்னோட பெரிய எதிர்பார்ப்பு படத்தின் வில்லன் Javier Bardem, இவரு யாருனா No Country for Old Men படத்துல சைக்கோ கொலைகாரனாக மிரட்டின ஆண்டன் சிகுரு. மனுஷன் பார்வையிலே பயம் காட்டுவார், இதுல அவரோட நடிப்பை நான் ரொம்பவே எதிர்பார்கிறேன். ஸ்கைஃபால்’ படத்துக்கு யதேச்சையாக நிறைய பெருமைகள் சேர்ந்து கொண்டன. முதல் பாண்ட் படமான ‘டாக்டர் நோ’ வந்த 1962ஐ கணக்கிட்டால் 50 ஆண்டுகள் ஆகி ஜேம்ஸ்பாண்டின் பொன்விழா ஆண்டாகி விட்டது 2012. இது பாண்ட் சீரீஸ்ல வர 23 வது படம். அப்புறம் படத்தோட டைரக்டர் சாம் மெண்டஸ், இவர் இது வரைக்கும் எடுத்தது எல்லாமே கிளாசிகல் படங்கள் தான். அமெரிக்கன் பியூட்டி படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்கி இருக்கார். ஆக்சன் படமே எடுத்தது இல்லை. இவரோட முத ஆக்சன் படமே பாண்ட் படமா அமைஞ்சது பெரிய ஆச்சிரியம். இவர் என்ன மாதிரியான பாண்ட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செஞ்சாரா என்பதை நாளைக்கு படம் பார்த்திட்டு வந்து சொல்லுறேன்.
படத்தோட பிரிமியர் ஷோ பார்த்தவங்க குடுத்த IMDB ரேட்டிங் 8.4. சோ..எதிர்பார்ப்பு இன்னும் ஜாஸ்தியாய் இருக்கு..


Monday, October 22, 2012

ட்விட்டர்ஸ் கைது (ராஜன் லீக்ஸ்) - சொல்லும் பாடம் என்ன ?

ராஜன் லீக்ஸ் (rajanleaks) என்கிற பெயரில் ட்வீட்ஸ் எழுதி வரும் ட்விட்டர்/பிளாக்கர் மற்றும் சரவணகுமார்  என்கிற  நிஃப்ட் (NIFT) சென்னை நாகரிக ஆடைகளுக்கான கல்லூரிப் பேராசிரியர் சைபர் க்ரைம் போலீஸ்சாரால் இன்று கைது செய்ய பட்டு உள்ளார். ராஜன் அவினாசியை சேர்ந்தவர். எனக்கு மிகவும் பிடித்த பிளாக்கர் மற்றும் ட்விட்டர். இவர்கள் இருவரையும் சேர்த்து  மொத்தம் ஆறு பேர் மீது பிரபல பின்னணி பாடகி சின்மயி சுமத்திய  குற்றச்சாற்றின் காரணமாக கைது செய்ய பட்டு உள்ளார்கள். அவர்கள் சின்மயி பற்றி அவதுறு பரப்பினார்கள் என்பது தான் குற்றச்சாற்று. பெண்களைத் தொந்திரவு செய்வது தொடர்பான சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழும் சின்மயிக்கு மிரட்டல் விடுத்ததாக இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழும் வழக்குக்கள் பதிவாயிருக்கின்றன. இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்தும், இட ஒதுக்கீடு குறித்தும் சின்மயி சொல்லிய கருத்துக்கு  ராஜன் மற்றும் சில ட்விட்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க அதன் தொடர்விளைவாக மோதல் முற்றியது. சின்மயி மற்றும் ராஜன் இருவரிடையே நடந்து கருத்து மோதல்களை ஆரம்பத்தில் இருந்தது பார்த்து வருவதால், யார் மீது தப்பு என்ற பஞ்சாயத்தின் உள்ளே போக விரும்ப வில்லை. ஆனால் இந்த குற்றச்சாற்று மற்றும் அதன் பின்விளைவுகள்குறித்த எனது கருத்தை மட்டும் பதிவு செய்வது தான் இந்த பதிவின் நோக்கம். 

இணையம்: முக்கியமாக பேஸ் புக், மற்றும் ட்விட்டர் நமக்கு நிறைய கருத்து சுதந்திரத்தை வழங்கி உள்ளது. எந்த அளவுக்கு என்றால் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரை வாயுக்கு வந்த படி வசை பாடும் அளவுக்கு, நாட்டின் பிரதமரை கண்டபடி அசிங்கமாய் கேலி பேசும் அளவுக்கு நமக்கு கருத்து சுதந்திரம் வழங்க பட்டு இருப்பதாய் நினைத்து கொள்கிறோம். இந்த மாதிரி இணைய சுதந்திரம் நமக்கு கடந்த இரண்டு வருடங்களாய் (இணைய அசுர வளர்ச்சிக்கு பின்பு) தான் கிடைத்து இருக்கிறது, அதற்க்கு முன்பு நமக்கு இந்த கருத்து சுதந்திரம் இருந்ததா என்றால் பதில் தெரியாது. நிஜமாய் எனக்கு தெரியாது. இந்த இணைய சுதந்திரம் நமக்கு தீடிர் என்று வழங்க பட்டது, இல்லை இல்லை, அந்த இணைய சுதந்திரத்தை நாமாக எடுத்து கொண்டோம். ஆனால் அந்த சுதந்திரத்தின் அளவு கோல் நம்மில் பலருக்கு சரியாக தெரியவில்லை. எந்த அளவுக்கு ஒருவரை பற்றி தரை குறைவாய் பேசுவது, எந்த அளவு ஒருவரை விமர்சனம் செய்வது என்கிற வரைமுறை நம்மில் பலருக்கு தெரியாது. கனிமொழி பற்றி, ராகுல்காந்தி பற்றி, கலைஞரை பற்றி, ஜெயலலிதா பற்றி அசிங்கமாய் எழுதும் பலருக்கு இருக்கும் ஒரே தைரியம் அவர்கள் யாரும் அதை படிக்க மாட்டார்கள் என்பது தான். தப்பி தவறி அவர்கள் யாராவது படித்து விட்டால் ராஜன்க்கு ஏற்பட்ட கதி தான் ஏற்படும் என்பது என் கருத்து. ஒருவரை பற்றி இணையத்தில் கண்டபடி பேசி ஈஸியாக தப்பிக்க முடியாது என்று இப்பொழுது நிரூபணம் ஆகி உள்ளது. தவறாக பேசினால் அதற்கான பலனை அவர் எதிர் கொள்ள தான் வேண்டும். 

ராஜன் மற்றும் அவரது சில நண்பர்கள் எல்லை மீறி போய் போய் உள்ளதாக சின்மயி குடுத்த சில ஸ்க்ரீன் ஷாட்ஸ் 


இந்த ட்வீட்ஸ் எழுதியவர்கள் கண்டிப்பாய் பகடிக்கு  எழுதியது போல் தெரியவில்லை. நிறைய ட்வீட்ஸ் மிகவும் கீழ்த்தரமாக எழுதி உள்ளார்கள். பெண் தானே என்ன செய்து விட முடியும் என்கிற சிந்தனை தான் மேலோங்கி இருக்கிறது. பல ட்வீட்ஸ் ஆபாசத்தின் உச்சம். இதே போன்ற தாக்குதல் சாதாரண ஒரு ஆள் மீது தொடுக்க பட்டு இருந்தால், அவர் வாயை முடி கொண்டு அமைதியாக இருந்தது இருப்பார். ஆனால் ஒரு பிரபலத்தின் மீது அவர் பார்வையில் படும் படி இப்படி ட்வீட் செய்தால் கண்டிப்பாய் அதன் பலனை அனுபவித்தே ஆக வேண்டும். 

நிறைய பேர் அவன், அப்படி எழுதுறான், இவன் கிசுகிசு எழுதுறான் என்று சொல்கிறார்கள், என்னை பொறுத்த வரை அவர்கள் அசிங்கமாய் எழுதியதை சம்பந்த பட்டவர் படித்தால், அதுவும் சம்பந்தபட்டவர் பிரபலமாக இருந்தால் இது தான் நடக்கும். கண்டிப்பாய் சைபர் க்ரைமில் தான் புகார்  குடுபார்கள். அதை தான் சின்மயியும் செய்து உள்ளார்கள். சரி பிரச்சினை கை மீறி போய் விட்டதால், சில ட்வீட்டர்ஸ் எடுத்த ஆயுதம், சின்மயி தமிழர்களை பற்றியும், தமிழ் மீனவர்களையும் இழிவாக பேசினார் என்கிற குற்றச்சாற்றை சின்மயி மீது சுமத்தினார்கள்.


சின்மயி மீனவர்களை பற்றி தவறாக பேசியதாக கூறப்படும் ட்வீட் இது தான்..
"மீனவர்கள் மீன்களை கொல்வது உங்களுக்கு பாவமாய் இல்லையா" - சின்மயி
ராஜன் மற்றும் சில ட்விட்டர்ஸ் இதை எப்படி திரித்து கூறி உள்ளார் என்றால் "மீனவர்கள் மீன்களைக் கொல்கிறார்களே அதனால் அவர்களையும் இலங்கைக் கடற்படை கொல்லலாம் -(எக்ஸ்ட்ரா பிட்டிங்)" இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் தெரிகிறது..


"மீனவர்கள் மீன்களைக் கொல்கிறார்களே அதனால் அவர்களையும் இலங்கைக் கடற்படை கொல்லலாம்" என்ற இந்த வசனம் 'இந்து' என்.ராம் பேசுவதாக 'வினவு' இணையத்தில் 2009ல் வெளியாகிய 'என் ராமாய ணம்' என்ற வீதி நாடகப் பிரதியில் வருகிறது. இந்த கருத்தை தான் சின்மயி கூறினார் என்று சொல்லி இருக்கிறார்கள்..

அதற்கு விளக்கம் குடுத்து சின்மயி வெளியிட விளக்க பதிவு, மற்றும் ஸ்க்ரீன் ஷாட் .


ஒட்டு மொத்த தமிழர்களுக்கு எதிரானவள், ஒரு குறிப்பிட்ட சாதித் திமிர், மீனவர்கள் குறித்து தரக்குறைவாகப் பேசினேன் என்று பலரும் தங்களுக்குத் தோன்றிய வகையில் மனம் போன போக்கில் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்கள்.

நான் ஒரு தமிழச்சி. பல தமிழர்களின் வீட்டின் செல்லப் பிள்ளை. தமிழர்களின் ஆதரவினாலும், கடவுள் கிருபையினாலும், என் தாயாருடன் ஆசிர்வாததினாலும் வளர்ந்து வரும் இளம் திரைக் கலைஞர்களில் நானும் ஒருவள்.

சிறு வயது முதலே என்னை சீராட்டி, பாராட்டி வளர்த்து வருவது இந்தத் தமிழ்ச் சமூகம் தான். பாரம்பரியமாகவே தமிழ் வளர்க்கும் பரம்பரையில் வந்தவள் நான். வித்வான் ரா.ராகவ ஐயங்கார் , முனா ராகவ ஐயங்கார் அவர்களின் பேத்தி என் தாயார். மறவர் சீமையில் தமிழ் வளர்த்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவள் தான் நான்!

உள்ளூர்த் தமிழர்களானாலும் சரி, வெளிநாடுகளில் வசிக்கும் புலம் பெயர் தமிழர்களானாலும் சரி என்னை அவர்களின் சொந்த சகோதரியாகவே பார்த்து வருகிறார்கள். நானும் அவர்களிடத்தில் எனக்குள்ள மதிப்பை கட்டிக் காத்து வருகிறேன். அதிலும் சிறப்பாக இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரையில், எங்கள் மறவன் சீமையின் ஒரு Extension ஆகத்தான் நாங்கள் கருதுகிறோம். அவர்களுடைய கஷ்டத்தை இன்னும் அதிகமாக உணர்ந்திருக்கிறோம். நான் இலங்கை தமிழர்களுக்காக நடத்தி வந்த கச்சேரிகளில் பங்கு பெற்று மருத்துவம் மற்றும் படிப்பிற்கு சம்பந்தப்பட்ட Charitieகளுக்கு நிதியுதவி திரட்டியிருக்கிறோம்.

இந்தச் சமுதாயத்தால் வளர்ச்சி பெற்று வரும் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற அளவு சமுதாயம் வளரவும் பங்களிப்பு தரவேண்டும் என்ற நம்பிக்கை உடையவள் நான்.

என்னுடைய கடுமையான பணிகளுக்கு இடையே சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாக என்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்வதோடு இல்லாமல் அடுத்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை எப்படி அணுகுகிறார்கள் என்று தெரிந்து கொண்டால் எனக்கு மிகுந்த பயனாக இருக்கும் என்று நம்பினேன். சுமார் இரண்டாண்டுகளுக்கு முன் சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் இணைந்து கொண்டேன். உலகெங்கிலும் வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்றார்கள். பேசினார்கள். விவாதித்தார்கள்.

திடீரென ஒரு நாள் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலைக் கண்டிக்கக்கோரி ட்விட்டரில் ஒரு சிலரால் ட்விட்டுகள் வெளியாகின. #TNFisherman என்ற hashடேக் (தொடர் கீச்சு) மூலம் அனைவரும் இலங்கை அரசை கண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கினார்கள். என்னையும் கேட்டார்கள். நல்லதொரு காரியத்தில் நானும் இணைந்து செயல்படுவதில் என்றுமே தயங்கியதில்லை. ஆனால் மேற்படி #TNFishermanதொடர்பில் வெளியான பல்வேறு ட்வீட்டுகளில் நம் நாட்டு மூத்த அரசியல் தலைவர்கள் உள்பட பலரை கேவலமாகவும், அவதூறாகவும் திட்டி ட்விட்டினார்கள். எனவே எனக்கு இந்த ஒரு குழுவுடன் இணைந்து (இந்த எண்ணம் நல்லதாக இருந்தாலும்) குறிப்பிட்ட hashtag ஐ ஆதரிக்க மாட்டேன் என்று கூறினேன். இந்த hashtag இல் மேற்கண்ட காரணங்களுக்காக நான் வெகுவாக புறக்கணிக்கும் ஒரு குழுவினரால் வற்புறுத்தப் பட்டதால் இந்தத் தொடர் கீச்சில் இணைய மறுத்தேன். இதற்கும் மீனவர்கள் மேல் எனக்குள்ள அனுதாபத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. என் அனுதாபத்தை என்னுடைய முறையில், hashtag போடாமல் நானே தனியாக ஒரு ட்விட் போட்டேன். இவர்களுடன் இணைய மறுத்தேன். இது தவறா? இதில் மீனவர்களுடைய பிரச்னையை பேசுகிறார்கள, அல்லது தங்களுடைய தனிப்பட்ட பிரச்சனைய புகுத்துகிறார்களா?

அடுத்து “நீங்கள் மீன் சாப்பிடுவது இல்லையா?” என்ற கேள்விக்கு “இல்லை. நான் நான் சைவம்” என்று பதில் கூறினேன். ”மீன் தொட்டி வாஸ்துக்காக இருக்கறிதே” என்று அதே ட்விட்டில் பதில் கேலி செய்த பொது, ”நான் மீன் சாப்பிடுவதுஇல்ல, தொட்டியில் வைத்து துன்புறுத்துவதும் இல்லை. PETA supporter” என்று ஒரு ":)" போட்டேன். இந்த பதில் கூட மேலே சொன்ன#TNFisherman Hashடேக் பிரச்னை நடப்பதற்கு முதல் நாள் வேறொரு கருத்துப் பரிமாற்றத்தின் போது தான்! ஆனால் நான் மீனவர்களைக் கொல்பவர்களைக் கண்டிக்க மாட்டேன். மீனவர்கள் மீன்களை கொல்கிறார்கள் என்றெல்லாம் கூறியதாக தகவல் திரித்துக் கூறப்பட்டு இணையம் முழுவதும் பரவியது. இந்த கற்பனை கீச்சுக்குச் சொந்தக்காரர் திருவாளர் @rajanleaks. இதெல்லாம் உண்மை தானா என்று உங்களில் பலர் என் தரப்பு என்று ஒன்று இருக்கவேண்டும் என்று கூட நினைக்கth தவறியது எனக்கு மிகவும் வருத்தமே. மற்றும் என்னுடைய சாதி, மதம், இனம் என்று சகல வகைகளிலும் ஏசப்பட்டேன் .

பிறகொரு சமயம் ‘இடஒதுக்கீடு’ தொடர்பான கருத்து விவாதத்தில் ஒரு மாணவி நூற்றிக்கு அருகில் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், 'FC’ என்ற காரணத்தினாலும், பண வசதிக் குறைவாலும், தனது மேற்படிப்பு தடைபட்டு போன வருத்தத்தை பகிர்ந்த போது, அந்த தருணத்தில் இந்த இட ஒதுக்கீடு அவசியம் தானா என்று நினைத்தேன். அது அந்த தருணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு. நீங்களும் அப்படித் தான் யோசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் மீண்டும் என் சாதியைப் பிடித்து இழுத்து, ‘இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவள் சின்மயி’ என்று பிரச்னை கிளப்பப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை பல சமயங்களில் பல இடங்களில் என்னை நேரடியாகவும், மறைமுகமாகவும் படு கேவலமான வசைச் சொற்களைக் கொண்டு ட்விட்டரில் விமரிசித்து வருகிறார்கள் ஒரு சிலர் கொண்ட கும்பல் ஒன்று.

என்னைப் பெற்று வளர்த்தெடுத்த என் தாய்..என்னுடைய வளர்ச்சிக்காவே தன் நேரம் முழுவதையும் செலவழித்து வரும் என் தாய்.. இந்த மாதிரியான வசைச் சொற்களைக் கண்டு மனம் வருந்தினார். இப்படிப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்து, இந்த மாதிரி தொடர்ந்து வசைபாடுபவர்களின் பட்டியலைத் தயாரித்து போலீஸ் துறையிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம்.பொது வெளியில் இப்படி அநாகரீகமாக நடந்த பலரின் பின்னணியை என் தாயார் கண்டறிந்து இவர்களில் பெரும்பாலானவர்கள் இள வயதும், திருமணம், சிறு குழந்தைகள் என்ற நிலையில் இருப்பதை உணர்ந்து அவசரத்தில் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவேண்டாம், பொறுமையாக பேசி உணர்த்த முயற்சிக்கலாம் என்று பலரிடம் அலைபேசியிலும், அவர்களின் நண்பர்கள் மூலமாகவும், ஒரு முடிவு காண, என் தாயார் முயற்சித்தார். அதன் விளைவு தான் திரு sharankay அவர்களின் மிக கீழ்த்தரமான கீசுகளின் வெளிபாடு. இதற்கு பிறகும் நாங்கள் சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்காவிட்டால் எங்களுக்கே மிகவும் தீதாத முடியும் என்ற காரணத்தினால் இந்த முடிவிற்கு தள்ளப்பட்டோம். நாங்கள் பரிதாபப்பட்டதை பயந்து விட்டதாக நினைத்து அதன் பிறகு தான் அநாகரிகத்தின் உச்சத்தையும் கடந்துவிட்டனர். மற்றபடி யாரையும் பழிவாங்குவதிலோ, தண்டனை வாங்கி கொடுப்பதிலோ எங்களுக்கு எந்த விதமான மகிழ்ச்சியும் கிடையாது.

இவற்றைத் தொடர வேண்டாம் என்று ஃபோன் மூலம் என் அம்மா சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்பு கொண்டு பேச முயற்சித்த போதும் அதனை மிரட்டல் விடுவதாகக் கூறி திசை திருப்ப முயன்றார்கள். என் அம்மாவையும் மிகத் தரக்குறைவாக கிண்டல், கேலி செய்து ட்விட்டினார்கள்.

அதன்பிறகு சட்டத்தின் துணியை நாடுவதை தவிர வேறு வழில்லாத நிலைக்கு தள்ளப்பட்டோம்.

இதற்குப் பிறகும் ஒரு பத்திரிகையின் கார்ட்டூனிஸ்ட் மூலம் நாங்கள் பேசாத வார்த்தைகளை நாங்கள் பேசியதாகச் சொல்லி பொய்ச் செய்தி பரப்பி உலகம் முழுதும் உள்ள தமிழர்களின் கொந்தளிப்பான உணர்சிகளை தூண்டும் வகையாக விஷயத்தை திசை திருப்பப்பட்டது.

இந்நிலையிலும் ஏராளமான தமிழ்ச் சகோதர, சகோதரிகள் தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் எங்களுக்குச் செய்தார்கள். வழி நடத்தினார்கள். ஆறுதல் சொன்னார்கள்.

இந்தவொரு சிரமமான சூழலில் எனக்கு முழு ஆதரவளித்த ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்துக்கும் நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

இப்பொழுது ராஜன் தரப்பு நண்பர்கள் சின்மயிடம் சமாதானம் பேச முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆல்தோட்டபூபதி (@thoatta) என்கிற ட்விட்டரின் சமாதான முயற்சி. நண்பர்களால் இது தான் செய்ய முடியும். அவர்கள் முயற்சி வெற்றி பெற்று ராஜன் இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வெளியே வர வேண்டும்.

தோட்டா அவர்களுக்கு சின்மயி தாயார் குடுத்த பதில் கீழே.

@selventhiran @thoatta @chinmayi உங்களை முழுக்க முழுக்க நம்புகிறேன். நீங்கள் திருமதி ரேவதியை பற்றி கவலைப்படாத நேரமில்லை என்பது எனக்கு தெரியும். நானும் அந்த குழதையையும் ரேவதி அவர்களை பற்றியும் எவ்வளவு feel பண்ணினேன் என்று உங்களுக்கு தெரியும். உங்களிடம் நான் முதலில் பேசிய போது உங்களின் தொடர்பு ராஜனுடன் அட்வைஸ் செய்யும் அளவில் இல்லை என்பதால் உங்கள் நண்பர் பரிசலிடம் எத்தனை முறை வாதாடினேன். அவர் நிஜமான நண்பராக இருந்திருந்தால் எங்களுக்காக வேண்டாம் அவர் நண்பருக்காக எடுத்துரைத்து இருக்கலாமில்லையா. இங்கு தோட்டா அவர்களின் முயற்சியை மதிக்கிறேன். பரிசலுக்கு எப்படி இப்படி ஒரு ....? அவர் எனக்கும் சரி ராஜனுக்கும் சரி நம்பிக்கை துரோகம் தான் செய்திருக்கிறார். திருமண வயதில் பெண்ணை வைத்திருக்கும் ஒரு தாயின் மன வேதனையை நீங்களும் மற்ற சிலரும் புரிந்து கொண்டீர்கள். இன்று தோட்டா அவர்களை retweet செய்த யாரவது பேசி இருப்பார்களா? நானும் அந்த குழதையையும் ரேவதி அவர்களை பற்றியும் எவ்வளவு feel பண்ணினேன் என்று உங்களுக்கு தெரியும். ? 

ராஜனை உங்கள் மொழியில் உசிப்பெத்தி உசுப்பேத்தி விட்டு சற்று நேர கேளிக்கை அனுபாவித்தர்களே. அன்று சின்மயி மற்றும் அவளைப்பெற்ற நானும், நிஜமான அண்ணன் போல நீரும் மேலும் சிலரும் துடித்தோம். அதையும் கேளிக்கைப் பொருளாக்கியவர்களுக்கு இன்று ராஜனுக்காக வருத்தப்பட உரிமையில்லை. இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற இந்த குறளை மேற்கோள் காட்டி எத்தனை முறை நான் சின்மயியை சமாதானப்படுத்தினேன் என்று உங்களுக்கு தெரியும். 

எங்கள் பொறுமையை இயலாமை என்றுதானே மிதித்தார்கள்? Please read my tweet reply to @itisprashanth.

நானும் சின்மயியும் இந்த கைதுகளால் சிறிதும் மகிழ்ச்சி அடையவில்லை. இன்று நீங்கள் கதறும் இதே possible நிலைமையை சுட்டிக்காட்டி ராஜனை புரியவையுங்கள் என்று பரிசலிடம் கதறினேனே அன்று வீணாக இருந்துவிட்டு இன்று குழந்தையை போட்டோ பிடித்து போடலாமா? குழந்தையை வெளியில் காண்பிக்கலாமா. மீண்டும் மக்களை தூண்டிவிட்டு பிரச்னையை பெரிதாக்கும் பரிசலை வன்மையாக கண்டிக்கிறேன். திரு தோட்டாவின் செண்டிமெண்ட்சை மதிக்கிறேன். 

வேறு ஒருவரின் சமாதான முயற்சிக்கு சின்மயி தாயார் T.Padmhasini ‏@Padmhasini  குடுத்த பதில் இங்கே.

இதை பார்க்கும் போது எனக்கு கவுண்டர் காமெடி தான் ஞாபகம் வருகிறது. "தாய் மாமன்" படம் என்று நினைக்கிறன். சம்பந்தமே இல்லாமல் கவுண்டரும் சத்யராஜும் மணிவண்ணன் வீடு வாசலில் நின்று சத்தம் போடுவார்கள், மணிவண்ணன் வெளியே வந்த உடன் கவுண்டர் பம்பி போய் " ஆளை பார்க்காத வரைக்கும் தாங்க சவுண்ட் விடுவோம், ஆள பார்த்தா சாத்திக்கிட்டு போயிடுவோம்" என்று சொல்லுவது தான் ஞாபகம் வருகிறது.