இரண்டு உலகத்தில் பாரல்லாக நடக்கும் பேண்டஸி கதை தான் "இரண்டாம் உலகம்" என்று படத்தின் ட்ரைலர் பார்த்தவுடனே புரிந்து விட்டது. ட்ரைலர் உடன் நிறுத்தி இருக்க வேண்டும். செல்வா என்கிற சினிமா வெறியன் மீது நம்பிக்கை வைத்து, படம் பார்க்க சென்ற எங்களை இந்த அளவு வதைத்து இருக்க வேண்டாம். சாண்டியாகோவில் ரீலீஸ் ஆகும் அணைத்து தமிழ் படங்களையும் தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் என்கிற கொள்கை படி, வீக் டே என்று கூட பாராமல் இன்று படத்துக்கு சென்ற எங்களுக்கு இது மாதிரியான தண்டனை கிடைத்து இருக்க கூடாது.
செல்வாவிடம் “நீங்கள் இதுவரை எடுத்த படங்களில் ஒன்றை மொத்தமாக அழிக்க வேண்டுமென்று என்று சொன்னால் எந்தப் படத்தை அழிப்பீர்கள்” என்று ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு சற்றும் தாமதிக்காமல் “ஆயிரத்தில் ஒருவன்” என்று சொன்னார். ஆனால் இனி மேல் அதே கேள்வியை இப்பொழுது கேட்டால், அவரது பதில் "இரண்டாம் உலகம்" என்று தான் வரும். செல்வாவின் கேரியரில் அவருக்கு அழிக்க முடியாத கெட்ட பேரை இந்த ஒரு படம் சம்பாரித்து குடுத்து விடும் என்று நான் நம்புகிறேன். மிஷ்கினுக்கு முகமுடி போல, செல்வாவுக்கு "இரண்டாம் உலகம்".
இரண்டு உலகம். இரண்டிலும் ஆர்யா - அனுஷ்கா ஜோடி. நிஜ உலகத்தில் வாழும் ரம்யா (அனுஷ்கா) டாக்டர். மதுவை (ஆர்யா) பார்த்தவுடன் காதல் கொள்கிறார். ஆர்யா முதலில் மது வேண்டாம் என்று சொல்கிறார், பிறகு ஓகே சொல்கிறார். பிறகு ரம்யா தனக்கு மது வேண்டாம் என்று சொல்கிறார். பிறகு ஓகே சொல்கிறார். படிக்கும் போதே தலை சுற்றுகிறதா ? படத்தில் இன்னும் பயங்கர குழப்பமாக இருக்கும். செல்வாவின் இத்தனை வருட படங்களிலே இது போன்ற மொக்கை காதல் எபிசோட்டை பார்த்து இருக்க முடியாது.
பேண்டஸி உலகத்தில் யாருக்கும் தான் அடிமை இல்லை என்று சொல்லிகொள்ளும் வீர (!) பெண் வர்ணா (அனுஷ்கா). இவர் மீது மோகம் கொள்கிறார் அதே உலகத்தில் வாழும் ஆர்யா. கவனிக்க மோகம் தான், காதல் அல்ல. இந்த உலகத்தில் காதல், வெக்கம் என்றால் என்னவென்று யாருக்கும் தெரியாது. இந்த உலகத்தில் ராஜா வேறு இருக்கிறார். கடவுளும் வாழ்கிறார். சந்தர்ப்ப வசத்தால், ஆர்யா-அனுஷ்கா திருமணம் நடக்கிறது. ஆர்யா பிடிக்காமல் அனுஷ்கா விபரித முடிவு ஒன்றை எடுக்கிறார். அதே நேரத்தில் நிஜ உலகிலும் விபரிதம் ஒன்று நடக்கிறது. அது என்ன விபரிதம் என்று அறிந்துகொள்ள உங்களிடம் அசாத்திய பொறுமை இருந்தால், தியேட்டரில் போய் பாருங்கள். அப்படி பொறுமை இல்லையென்றால் படத்தை பார்க்காமல் இருப்பதே நன்று.
இன்று இரண்டாம் உலகம் படத்திருக்கு போகும் முன்பு, செல்வாவின் ஆனந்த விகடன் பேட்டியை பார்த்துவிட்டு தான் சென்றேன். அவரின் பேச்சில் தான் சினிமாவை காக்க வந்த கடவுள் போலவும், தமிழ் ரசிகர்களுக்கு ரசனையே இல்லை என்பது போல் தோன்றும். ஆனால் உண்மையில் தமிழ் ரசிகர்களுக்கு ரசனை இருக்கிறதோ இல்லையோ, சகிப்புத்தன்மை ரொம்பவே ஜாஸ்தி. இது மாதிரி மெண்டல் தனமான படங்களை எல்லாம் சகித்து கொள்கிறார்களே. இந்த காவியத்தை முழுசாய் பார்த்த அனைவருக்கும் செல்வா வீடு வீடாய் சென்று, கையை பிடித்து நன்றி சொல்ல வேண்டும்.
ஆர்யா, செல்வா சொன்னதை அப்படியே கேட்டு நடித்து இருக்கிறார். அனுஷ்காவும் அதையே செய்து இருக்கிறார். இருவரும் இயக்குனர் மீது அதித நம்பிக்கை வைத்து, அவர் சொன்னதை அப்படியே செய்து இருக்கிறார்கள். ஆனால் இது போன்ற பலவீனமான கதையில், நடிகர்கள் என்ன தான் குட்டிகரணம் அடித்தாலும் எடுபட்டு இருக்காது. இது போன்ற செயற்கை தனமாக காட்சிகள் கொண்டு எந்த படமும் வந்தது இல்லை, இனி மேலும் வருமா என்று எனக்கு சந்தேகமே.
ஆர்யா, அனுஷ்கா தவிர்த்து மற்ற நடிகர்களின் தேர்வில் பெரிய கோட்டை விட்டு உள்ளார் செல்வா. பேண்டஸி உலகில் வரும் கதாபாத்திரங்கள் அனைவருமே ஹிந்தி டப்பிங் நாடகங்களில் வருவது போல் வந்து செல்கிறார்கள். காட்சியமைப்பை பற்றி சொல்லவே வேண்டாம். படுமோசமாய் அமைக்க பட்டு இருக்கிறது. வசனங்கள், ஸ்கூல் டிராமாவில் கூட இதை விட சிறப்பாய் எழுதி இருப்பார்கள். கிராபிக்ஸ் காட்சிகளுக்கு நிறைய உழைத்து இருக்கிறார்கள். சரியாக சொன்னால் ஆயிரத்தில் ஒருவனை விட நன்றாக இருந்தது.
படத்தின் ஒரே ஆறுதல் பின்னணி இசை மட்டுமே. ட்ரைலரில் வரும் பின்னணி இசையை தான் படம் முழுக்க தவழ விட்டு இருக்கிறார் அனிருத். பாடல்கள், மெல்ல மெல்ல செத்து கொண்டிருக்கும் போது, கழுத்தில் ஏறி மிதிப்பது போல் இருக்கிறது. ஹாரிஸ் சார், அந்த 12B டியூன்னை எப்ப தான் விடுவீங்களோ ? பேண்டஸி உலகத்தை நம் கண் முன்னே கொண்டு வர மிகவும் மெனக்கட்டு இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. விஷுவல்ஸ் அனைத்துமே நன்றாக உள்ளது. வலுவில்லாத திரைக்கதை, மொக்கை காட்சிகளை கொண்டதால், இது செல்வாவின் வொர்ஸ்ட் மூவி என்று உறுதியாக சொல்லலாம்.
இரண்டாம் உலகம் - சொதப்பல் செல்வா !!
My Rating: 4.0/10.
சமிபத்தில் எழுதியது : வில்லா (2013)